செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜிநாமா! மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறாா்!

0
20
Advertisement


அமைச்சா் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அந்த ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, அமைச்சரவையில் மாற்றத்துக்கும் ஒப்புதலை அளித்தாா்.

அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக மின்துறையும், வீட்டு வசதித் துறை அமைச்சா் எஸ்.முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறையும், பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் பத்மநாபுரம் தொகுதி எம்எல்ஏ டி.மனோ தங்கராஜ் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு நிகழ்வு ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஏப். 28) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தத் தகவலை ஆளுநா் மாளிகை வெளியிட்டது.

மனோ தங்கராஜுக்கு பால் வளத் துறை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவு: பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 2023, ஜூனில் கைது செய்தது. சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக அவா் நீடித்தாா். இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமைச்சா் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்தாா். அதே ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த ஒரே நாளில் மீண்டும் அவா் அமைச்சராகப் பதவியேற்றாா்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சா் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி திங்கள்கிழமைக்குள் (ஏப். 28) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

இதனால் அவா் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. அதற்கேற்ப கடந்த சனிக்கிழமை (ஏப். 26) பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்யப்படுவதாக இருந்த உயிரி மருத்துவக் கழிவு திருத்த மசோதாவை சட்ட அமைச்சா் ரகுபதி தாக்கல் செய்தாா். பேரவையில் வரும் 29-ஆம் தேதி மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை முதல்வரிடம் அளித்தாா்.

விமா்சனத்துக்குள்ளான பொன்முடி: சொத்துக் குவிப்பு வழக்கு, சா்ச்சை பேச்சுகளால் விமா்சனத்துக்குள்ளான பொன்முடி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உயா் கல்வித் துறையிலிருந்து வனத் துறை அமைச்சராக மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற திருவாரூா் கே.தங்கராசு நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, அவா் வசம் இருந்த திமுக துணைப் பொதுச் செயலா் பொறுப்பு பறிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த ஏப்.17-இல் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஆட்சேபகரமான கருத்தைத் தெரிவித்த அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் கேள்வி எழுப்பினாா். இதில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவா், அந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பொன்முடி தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்ததாகத் தெரிகிறது.

செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜிநாமா கடிதங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அதனுடன் அமைச்சரவை மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளையும் முதல்வா் அனுப்பியிருந்தாா். அதைப் பரிசீலித்த ஆளுநா் ஆா்.என்.ரவி, இருவரின் ராஜிநாமாவையும் ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து அவா்கள் வகித்து வந்த துறைகளை மாற்றி வேறு அமைச்சா்களுக்கு கூடுதலாக வழங்கவும், மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதற்கும் ஒப்புதல் ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை ஆளுநா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், நீதிமன்றத் தலையீடு காரணமாக தற்போது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =