அப்போது, “கட்சியை விட்டுப் போகலாம்” என்று தொண்டர்கள் கூற, “அவ்வளவுதான்’ என்ற ராமதாஸ், “நான் ஆரம்பித்த கட்சி இது. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்ய வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள். யாராக இருந்தாலும்” என்றார்.
அதையடுத்து அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினார் அன்புமணி. இந்த மோதலின் பின்னணி குறித்து பா.ம.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அன்புமணியின் உடன் பிறந்த அக்கா ஸ்ரீகாந்தியின் மகன்தான் முகுந்தன் பரசுராமன். மாநில இளைஞரணி பதவியை அவருக்கு வழங்குவதற்காகத்தான், சில மாதங்களுக்கு முன்பு அவரை கட்சியில் இணைக்க முடிவெடுத்தார் ராமதாஸ்.

ஆனால் அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. `ஏற்கெனவே குடும்பக் கட்சி என்று நம்மை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் முகுந்தனை ஏன் கட்சிக்குள் அழைத்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் நீண்ட நாட்களாகவே பனிப்போர் நிலவி வந்தது. இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவிப்பார் என்பதும், அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவருக்குமே தெரியும். முகுந்தனுக்கும் இது தெரியும். அதனால் தான் முகுந்தனை ராமதாஸ் மேடைக்கு வரும்படி அழைக்கும் போது அவர் அங்கு செல்லவில்லை” என்றனர்.



